அமர்த்தியா சென் குறித்து வெளியான செய்திக்கு மகள் மறுப்பு.. நலமுடன் இருப்பதாக ட்வீட்
கொல்கத்தா: தலைசிறந்த பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வெளியான செய்திக்கு அவரது மகள் நந்தனா சென் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் நலமுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். கடந்த 1998 - ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் வென்றார். 1933 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் சாந்தி நிகேதனில் பிறந்த அமர்த்தியா சென் பொருளாதாரத்தில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கி வருகிறார். விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். தொடர்ந்து கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ பட்டம் பெற்றார்.

இதனை தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றினார். பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள், அரசியல் தத்துவம் மற்றும் பொருளாதார கோட்பாடுகள் என இவரது ஆய்வுகள் விரிவடைந்தன.
இவர் வகுத்து தந்த அறிவுரைகள், வழிமுறைகள் ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியாக இருந்தது என்றால் மிகயாகாது. அமர்த்தியா சென்னின் பொருளாதார சிந்தனைகளை கொண்டு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. அமர்த்தியா சென்னுக்கு 1999-ம் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை அமெரிக்காவில் வசித்து வரும் அமர்த்தியா சென் உயிரிழந்தாக செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை அவரது மகள் நந்தனா சென் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அப்பா நலமுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ப்ரண்ட்ஸ் உங்கள் அக்கறைக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
ஆனால் கூறப்பட்டவை அனைத்தும் போலி செய்தி. அப்பா நலமுடன் இருக்கிறார். நாங்கள் குடும்பத்துடன் ஒரு வாரம் கேம்ப்ரிட்ஜில் ஒன்றாக கழித்தோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரம் 2 பாடங்களை கற்பிக்கிறார். எப்போதும் போல அவர் பிசியாகவே இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications