அஸாராம் பாபுவின் மகனை காப்பாற்ற ரூ.5 கோடி லஞ்சம் தர முயற்சி!
சூரத்: பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியார் அஸாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை காப்பாற்ற லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அஸாராம் பாபுவின் ஆசிரமத்தில் வசித்து வந்த ஒரு பெண் அவர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். அப்பெண்ணின் சகோதரியும் அஸாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீதும் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அஸாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். தப்பி ஓடி தலைமறைவாக அவரது மகனும் அண்மையில் சிக்கினான்.
இந்நிலையில், அஸாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதான வழக்குகளை பலவீனப்படுத்த போலீசார், டாக்டர்கள், நீதித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதில், நாராயண் சாயின் கூட்டாளிகள் 5 பேர் ஈடுபட்டனர். அவர்களை சூரத் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சி.கே.கும்பானி என்பவர் அணுகி, லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சப்பணத்தை போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு, தானே வினியோகிப்பதாக அவர் உறுதி அளித்ததாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கும்பானியும், நாராயண் சாயின் கூட்டாளிகள் 5 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.5 கோடி, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications