2 நாள் பயணமாக ஈரான் சென்றார் மோடி- சபஹர் துறைமுகம் மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று ஈரான் சென்றடைந்தார். ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இந்த பயணத்தின் போது கையெழுத்தாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியாவின் எரிசக்தி தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் ஈரானுடன் நீண்ட காலமாக கலாசார, நாகரிக, பண்பாட்டு உறவுகளை இந்தியா பேணி வருகிறது.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான் ஏற்கனவே அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈரான் புறப்பட்டு சென்றார். 2 நாள் பயணமாக சென்றிருக்கும் அவர் ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கமேனி மற்றும் அதிபர் ஹசன் ரவுகானி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மார்க்கமாக எளிதில் இணைக்க முடியும்.
My first programme in Tehran was a visit to the Bhai Ganga Singh Sabha Gurudwara. pic.twitter.com/dLU2jYRlWN
— Narendra Modi (@narendramodi) May 22, 2016
இந்த சபஹர் துறைமுகம் அருகேதான் பாகிஸ்தானின் கத்வார் துறைமுகம் உள்ளது. இதனை சீனா மேம்படுத்தி பயன்பாட்டுக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இரு நாட்டு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு மற்றும் தனியார் துறைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த திட்டத்தில் இந்தியா முதல் கட்டமாக ரூ.1360 கோடி முதலீடு செய்கிறது.
இது தவிர இந்தியா, ஈரான் இடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அந்த நாட்டு அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் போய் சேர்ந்த பிரதமர் மோடி அங்குள்ள குருத்வாரா ஒன்றுக்கு சென்றார். மேலும் இந்தியா-ஈரான் கலாசாரம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
டெஹ்ரான் போய் சேர்ந்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில், ஈரான் மீதான பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் நீக்கியதன் மூலம் இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் குறிப்பாக பொருளாதார துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளுக்கு வழி பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications