மன்மோகன் காயத்துக்கு 'மருந்துபோட்ட' மோடி
டெல்லி: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதைப்போல நிகழ்ந்துள்ளது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடனான பிரதமர் நரேந்திரமோடியின் சந்திப்பு.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை போட்டு வாட்டி எடுத்தது பாஜக. மோடியும் தன்பங்குக்கு விளாசினார். ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற உடனேயே பழைய கசப்புகளை மறக்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்து கூட்டத்தில் பேசிய மோடி, "முந்தைய அரசு எந்த பணியையும் செய்யாமல் இருந்ததாக நான் கூற மாட்டேன். நாட்டின் வளர்ச்சியில் அனைத்து அரசுகளுக்கும் பங்கு உள்ளது" என்று கூறி தான் செல்ல உள்ள பாதையை வெளிச்சம்போட்டு காண்பித்தார்.

இந்நிலையில்தான், நேற்று முன்தினம் மாலை மன்மோகன்சிங்கின் டெல்லி இல்லத்துக்கு மோடி நேரடியாக சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். பிரதமராக இருந்த 10 ஆண்டுகாலமாக டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள 7ம் எண் வீட்டில் வசித்தார் மன்மோகன்சிங். மோடிக்காக அந்த வீட்டை விட்டு காலி செய்துவிட்டு மோதிலால் நேரு மாளிகைக்கு குடிபெயர்ந்தார். இந்த வீட்டில்தான் முன்னாள் மற்றும் இன்னாள் பிரதமர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.
பிரதமரை வாசல் வரை வந்து வரவேற்றனர் மன்மோகனும், அவரது மனைவி குருசரன் கவுரும். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது. மீடியாக்களுக்கு தகவல் கொடுக்காமல் சர்ப்ரைசாகத்தான் இந்த விசிட் இருந்ததாக கூறுகிறார்கள் டெல்லி ஊடகத்தார். அண்டை நாடுகளுடனே இணக்கமாக செல்ல விரும்பும் மோடி, முன்னாள் பிரதமரை மட்டும் விட்டுவிடுவாரா என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications