மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் நரேந்திர மோடி- அத்வானி மகன் புகழாரம்!
காந்திநகர்: பாரதிய ஜனதாவும் நரேந்திர மோடியும் ஒன்றுதான்.. மோடிதான் மக்களின் நம்பிக்கையை பெற்றவர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் மகன் ஜெயந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டபோதெல்லாம் கலகக் குரல் எழுப்பியவர் எல்.கே. அத்வானி. லோக்சபா தேர்தலிலும் கூட போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் மோடியின் வியூகத்தில் வேறு வழியின்றி காந்திநகரிலே போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அத்வானி.
தற்போது அத்வானி தொகுதியில் அவரது மகன் ஜெயந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜெயந்த் கூறியதாவது:
பாஜகவையும் மோடியையும் வெவ்வேறாகப் பார்க்க முடியாது. பாஜகவின் தேர்தல் முகம் மோடிதான். அவர்தான் மக்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார்.
1998,99ஆம் ஆண்டு தேர்தல்களை விட இம்முறை பாரதிய ஜனதா கட்சி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இம்முறை மத்தியில் தாமரை அரசுதான் மலரும். காந்தி நகர் தொகுதியில் நிச்சயம் அத்வானி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
1991ஆம் ஆண்டு முதல் காந்திநகரில் அத்வானிதான் வென்றுள்ளார். அதனால் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.
இவ்வாறு ஜெயந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications