இன்று கூடுகிறது பாஜகவின் ஆட்சி மன்றக் குழு: பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு?
டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முடிவில் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்குவதற்காக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். நரேந்திர மோடிக்கு அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை தனித் தனியே ராஜ்நாத் சந்தித்து பேசினார். அத்வானியை நேற்று முன்தினமும், சுஷ்மா ஸ்வராஜை நேற்றும் ராஜ்நாத் சந்தித்துப் பேசினார்.

நேற்றைய சந்திப்பின் போது அத்வானியின் ஒப்புதல் இன்றி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று டெல்லியில் மாலையில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் வேட்பாளராக மோடியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications