2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி
வாரணாசி: இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வாரணாசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, கூட்டணி கட்சி தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அதே போல், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே என கூட்டணி கட்சி தலைவர்கள் மோடிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா முழுவதும் பாஜக கூட்டணிக்கு ஆதரவான நிலையே இருப்பதாகவும், வாரணாசியில் உள்ள தமிழ் மக்களிடம் பிரதமருக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும் தம்பிதுரை கூறினார். தேர்தலுக்கு பின்னரும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பு மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், கரூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாரணாசியில் மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications