நவாஸ் ஷெரிப்புக்கு இன்று 64வது பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 25ம்தேதியான இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது 64-ஆவது வயதில் காலெடுத்து வைக்கிறார். இதையொட்டி டிவிட்டர் தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் "நவாஸ் ஷெரிப்பின் பிறந்த நாளான இன்று, எனது நல்வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நவாஸ் ஷெரிப் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருக்குமே அழைப்புவிடுத்திருந்தார். அதனையேற்று, நவாஸ் ஷெரிப்பும் இந்தியா வந்திருந்து வாழ்த்தினார். ஆனால், சில மாதங்களிலேயே இரு தலைவர்கள் இடையேயான கசப்புணர்வு அதிகரித்தது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஷெரிப்பைவிட்டு விலக ஆரம்பித்தார் மோடி.
ஆனால் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகளை தாலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்தபோது, இந்தியா தனது ஆதரவை பாகிஸ்தானுக்கு அளித்தது நினைவிருக்கலாம்.