சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அதே நேரத்தில் இருவரும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜஹவர்லால் நேருவின் முயற்சியால் கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகையை நிர்வகித்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுமன் துபே, மோதி லால் வோரா, ஆஸ்கர் பெர்ணான்டஸ், சாம் பிட்ரோடா, யங் இந்தியா நிறுவனம் ஆகியோர் அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டி, டெல்லி நீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூனில் சம்மன் அனுப்பியது. இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடையை கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி நீக்கியது.
இதையடுத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி நேரில் ஆஜராகி சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஜாமீன் பெற்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேர் சார்பாக தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, நீதிபதிகள் ஜே.எஸ். கேஹர், சி. நாகப்பன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முக்கிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே எந்த நீதிமன்றமும் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றச்சாட்டை மறுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. எனவே இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் அகற்றப்படுகிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் நேரில் ஆஜராவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 20-ந் தேதி நேரில் ஆஜராக தேவையில்லை. ஆனால் நீதிமன்றம் விரும்பினால் அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராக தயாராக இருக்க வேண்டும். எனினும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.