பாஜக, காங். கட்சிகளை போல் டெல்லியிலிருந்து நமக்கு எந்த பாஸ்களும் கிடையாது.. நவீன் பட்நாயக் தாக்கு
புவனேஸ்வரம்: மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தை தேசிய கட்சிகள் ஆட்சி செய்தால் அந்த மாநிலம் உருவானதற்கான குறிக்கோள் நீர்த்து போய்விடும் என ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகளின் திட்டமே தேசியவாதம்தான் என்றும் பட்நாயக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஜு ஜனதா கட்சியின் தலைவரும் ஒடிஸா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் அவரது கட்சியின் இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் டிசம்பர் 26 ஒடிஸா மாநிலம் உருவான தினம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ஒடிஸாவை தனி மாநிலமாக உருவாக்கப்பட்டதன் நோக்கமே அந்த மாநிலத்தை பாதுகாக்க அதன் தனித்தன்மையை பாதுகாக்க, மாநில மக்களின் உரிமைகளுக்காக போராட ஆகியவைதான். அந்த மாநில கட்சியால் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சிக்காக போராட முடியும்.
நிலைப்பாடு
மாநில கட்சிதான் அந்த மாநில மக்களின் நிலைப்பாட்டுடன் ஒத்து போக முடியும். எனவே பிராந்திய கட்சியான பிஜு ஜனதா தளம் ஒடிஸா மாநிலம் உருவான ஆசைகளுக்கும் லட்சியங்களுக்கும் ஒத்ததாகும். தேசிய கட்சிகள் எப்போதும் ஒரு முக்கிய செயல்திட்டங்களையே கொண்டிருக்கும்.
இந்தி மொழி
அவர்களது வியூகம் அனைத்தும் ஒரே மொழி இந்தி, ஒரே கலாச்சாரம், ஒரே கொள்கை ஆகியவற்றை சுற்றியே இருக்கும். இவை பெரிய மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை ஈர்க்கும். ஆனால் சிறிய மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் தனித்துவமான அடையாளத்தை புறக்கணித்து தேசிய கட்சிகள் ஒரு விஷயத்தை நாடு முழுவதும் திணிக்கின்றன.
ஒடியா முக்கியம்
நமக்கு இந்தியை விட ஒடியா மொழிதான் முக்கியம். மற்ற ஆறுகளை காட்டிலும் நம் மாநிலத்தில் பாயும் மகாநதியே புனிதமானதாகும். ஒடிஸி இசையே நமக்கு கலை வடிவம் கொண்டதாகும். கோசாலியும் ஹோவும் நமக்கு முக்கிய மொழிகளாகும். நம் மாநிலத்தில் பன்முகத்தன்மை கொண்ட பழங்குடியின மக்களே நமக்கு பெருமையாகும். நமது சம்பல்புரி கைத்தறியே உலகத்தரம் வாய்ந்ததாகும்.
கடலின் சிறு துளி
தேசிய கட்சிகளுக்கு ஒடிஸா மாநில மக்கள் என்பவர்கள் கடலில் கிடக்கும் ஒரு சிறுதுளி நீராகும். ஆனால் மாநில கட்சிகளான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ஒடிஸா மக்கள் கடல் போன்றவர்கள். புரி ஜெகந்நாதர் மாநிலத்தின் உறுதியான அடித்தளமாகும். அந்த கோயிலை ஒரு மதத்தின் உருவமாக மட்டுமே யாரும் பார்ப்பதில்லை. நம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறார்கள்.
தேசிய கட்சிகளின் நோக்கமே தேர்தல்தான்
தேசிய கட்சிகளின் முக்கிய நோக்கமே தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அந்த தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் முக்கிய பதவிகளையோ அல்லது அமைச்சர் பதவியையோ பெற அக்கட்சியின் தலைவர்களுக்கு தூபம் போடுகிறார்கள்.
ஆதரவு குரல்
தேசிய கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு மாநிலத்தின் தனித்தன்மை பாதுகாக்கவோ அல்லது அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ முடியாது. தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து என்பதை தேர்தல் பிரசாரத்தின் முதல் வாக்குறுதியாக கொடுப்பர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவற்றை மறந்துவிடுவர். ஆனால் ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் நீண்ட காலமாக போராடி வருகிறது. குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாத தாயை போல் ஒடிஸாவிடம் காட்ட வேண்டும் என தேசிய கட்சிகளுக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
ரிமோட் கன்ட்ரோல்
மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் டெல்லியிலிருந்து ரிமோ கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. அது போல் மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளும் அவர்களது தேசிய தலைவர் சொல்வதை கேட்டு நடக்கின்றன. ஆனால் நம்மை டெல்லியிலிருந்து இயக்க எந்த தலைவரும் இல்லை. ஒடிஸாவின் நாலரை கோடி மக்களே நமது தலைவர்கள் என்றார் நவீன் பட்நாயக். 1936-ஆம் ஆண்டு ஒடியா என்ற மொழியை அடிப்படையாக கொண்டு ஒடிஸா என்ற மாநிலம் பிரிக்கப்பட்டது.