ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்!
புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருடன் அம்மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஒடிசா மாநிலத்தில் லோக் சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஒடிசா கவர்னர் கணேஷி லாலை சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கைழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கூறினார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் புவனேஷ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வராக 5வது முறையாக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நவீன் பட்நாயக்கை தொடர்ந்து அவரது அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 2000 ஆம்ஆண்டு முதல் முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக். அன்று முதல் தொடர்ந்து ஒடிசா முதல்வர் அரியணையிலேயே அமர்ந்துள்ளார் நவீன் பட்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications