இப்படி பேசலாமா நவ்ஜோத் சிங் சித்து? பஞ்சாப்பில் போராட்டங்கள்.. சட்டசபை வளாகத்தில் உருவப்படம் எரிப்பு
அமிர்தசரஸ்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக கூறி, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து உருவப்படங்கள், சட்டசபை வளாகத்தில் சிரோன்மணி அகாலி தள் கட்சியினரால் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி இந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்த தீவிரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தான் மீது இந்திய அரசின் கோபம் திரும்பி உள்ளது.
ஆனால், இது பற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் என்ற நாட்டையோ, தனிப்பட்ட ஒருவரையோ இந்த விஷயத்தில் பழி சொல்லக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

சித்துவிற்கு எதிர்ப்பு
சித்து கருத்தை எதிர்த்து, பஞ்சாப் முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகின்றன. நவ்ஜோத் சிங் சித்து, முன்பு பாஜகவில் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். பிறகு, காங்கிரஸில் இணைந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநில அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதனால் இவர் மீது பாஜக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே பாகிஸ்தானுக்கு ஆதரவான இவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

சித்து உருவப்படம்
இந்த நிலையில் பஞ்சாப் எதிர்க் கட்சிகளில் ஒன்றான சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் பிக்ராம்சிங் மஜிதியா, இன்று சட்டசபை வளாகத்தில் நவ்ஜோத் சிங் சித்து உருவப்படத்தை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்ய.

அவையில் கோஷம்
மேலும், சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சிரோன்மணி அகாலிதளம், பாஜக கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் கோஷங்கள் எழுப்பியதால் பஞ்சாப் சட்டசபையில் இன்று பெரும் அமளி நிலவியது.

இம்ரான்கான் பதவியேற்பு
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது, அந்த விழாவில் நவ்ஜோத்சிங் சித்து, பங்கேற்றார். பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதியை அந்த விழாவில் சித்து கட்டித்தழுவினார். அப்போதே சித்துவிற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications