தங்களைப் பலப்படுத்திக் கொள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்கள்...!
ராய்ச்சூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் 13 சிஆர்பிஎப் வீரர்களை நக்சலைட்கள் தாக்கிக் கொன்ற விவகாரம் குறித்து முன் கூட்டியே மாநில அரசு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்று 23 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதைத் தடுக்கத் தவறி விட்டனர்.
நவம்பர் 7ம் தேதி மத்திய உளவுப் பிரிவு, மாநில உளவுப் பிரிவுக்கு, இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தது. சட்டிஸ்கர் மாநிலத்தில் பெரிய தாக்குதல் ஒன்றுக்கு நக்சலைட்கள் திட்டமிட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
பஸ்தர் பகுதியில் நக்சலைட்கள் கிட்டத்தட்ட பலவீனமடைந்துள்ளனர். தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் மீண்டும் ஒன்று சேர அவர்கள் முயற்சிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்களிடையே ஒரு வகையான விரக்தியும், சோர்வும் அதிகரித்திருப்பதாகவும், அதிலிருந்து விடுபட பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். பெரிய தாக்குதல் நடந்தால்தான் நக்சலைட்கள் மத்தியில் மீண்டும் உத்வேகம் அதிகரிக்கும் என்பது அவர்களது திட்டமாகும்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சட்டிஸ்கர் படையினர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நக்சலைட்களைக் கைது செய்திருந்தனர். இதனால் நக்சலைட்கள் மிகவும் சோர்வடைந்து போயிருந்தனர். இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்திருந்தது. இதனால்தான் பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். அதன்படியே நேற்று நடத்திக் காட்டி விட்டனர்.
நக்சலைட்களின் தாக்குதலை முறியடிக்க உளவுப் பிரிவினரும், பாதுகாப்புப் படையினரும் உஷாராகவே இருந்தனர். ஆனால் இந்த முறை நக்சலைட்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டனர். கடந்த 3 மாதமாகவே இந்தத் தாக்குதலை திட்டமிட்டு வந்தனர் நக்சலைட்கள்.
இந்தத் தாக்குதல் மூலம் நக்சலைட்கள் மத்தியில் ஒரு விதமான உற்சாகம், உத்வேகம், தீவிரம் பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மேலும் பல தாக்குதல்களுக்கும் அவர்கள் திட்டமிடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.