சிஆர்பிஎப் வீரர் வீட்டை குண்டு வைத்துத் தகர்த்த நக்ஸல்கள்.. யாரும் காயமில்லை!
ஒளரங்காபாத், பீகார்: பீகார் மாநிலம் ஒளரங்காபாத் நகரில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரின் வீட்டை நக்சலைட்கள் குண்டு வீசித் தாக்கினர். இதில் வீடு சேதமடைந்தது. இருப்பினும் இதில் யாரும் காயமடையவில்லை.
குடும்பா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் 24க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கி நக்சலைடகள் அங்கு வந்தனர். அங்குள்ள சிஆர்பிஎப் வீரர் வினோத் குமாரின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றினர். அதன் பின்னர் வீட்டை குண்டு வீசித் தகர்த்தனர்.
சம்பவம் நடந்தபோது வீட்டில் வினோத் குமார் இல்லை. பின்னர் ஒரு துண்டுப் பிரசுரத்தை அங்கு போட்டு விட்டு நக்சலைட்கள் போய் விட்டனர். அதில், இதை விட மோசமான சம்பவங்கள் தொடரும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஒளரங்கபாத் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு நக்சலைட் வேட்டையில் பல்வேறு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதில் சிஆர்பிஎப்பும் ஒன்றாகும். எனவேதான் சிஆர்பிஎப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இப்படி வீட்டை மட்டும் தகர்த்து விட்டு நக்சலைட்கள் போயிருப்பதாக கருதப்படுகிறது.