ஐகோர்ட் கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. 3,000 ஜூனியர் டாக்டர்கள் திடீர் ராஜினாமா.. ம.பி.யில் பரபரப்பு!
போபால்: மத்திய பிரதேசத்தில் 3,000 ஜூனியர் டாக்டர்கள் தங்களது வேலையை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நவடிக்கை பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஜூனியர் மருத்துவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
ஜூனியர் டாக்டர்கள் போராட்டம்
அதாவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷைலேந்திர சிங் என்பவர் இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஐகோர்ட் கண்டனம்
இதனை விசாரித்த தலைமை நீதிபதி முகமது ரபீக் அகமது மற்றும் நீதிபதி சுஜோய் பால் ஆகியோர் அடங்கிய அமர்வு கொரோனா பேரிடரின்போது டாக்டர்கள் போராட்டம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர்.
அதிரடி ராஜினாமா
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை மீண்டும் தொடங்கவில்லை என்றால், டாக்டர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் அதிரடி திருப்பமாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 3,000 ஜூனியர் டாக்டர்கள் அதிரடியாக தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
எது சட்டவிரோதம்?
அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தின் (எம்.பி.ஜே.டி.ஏ) தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா கூறுகையில், ' எங்களது உரிமையை கேட்டு போராடினால் அது சட்டவிரோதமா? கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும். மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் விரைவில் எங்களது போராட்டத்தில் இணைவார்கள். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்' என்று கூறினார்.