நேதாஜியை போர்க்குற்றவாளி என்றாரா நேரு? போலி கடிதம் தயாரித்த மத்திய அரசு: ஆம் ஆத்மி பகீர்
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு போர்க்குற்றவாளி என்று கூறி இந்திய முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் அட்லீக்கு எழுதியதாக மத்திய அரசு வெளியிட்ட கடிதம் போலியாக ஜோடிக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவு குறித்து மர்மம் நீடிக்கும் நிலையில், இதுவரை வெளியிடப்படாமல் இருந்த ஆவணங்களை தேசிய ஆவண காப்பகம் மூலம் வெளியிட பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த சனிக்கிழமை நேதாஜியின் 119வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்று 100 ஆவணங்களை மோடி வெளியிட்டார். அதில் ஒரு ஆவணம் சர்ச்சையை கிளப்பியது.
கடிதம்
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் அட்லீக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதம்தான் சர்ச்சைக்கு காரணம். அக்கடிதத்தில், நேதாஜியை ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவிப்பதை போல நேரு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
போலியானதாம்
இக்கடிதம் போலியானது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளதோடு, இப்படி போலி கடிதம் வெளியிட்டது மத்திய அரசுதான் என குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
நேரு புகழுக்கு பங்கம்
ஆம் ஆத்மி தலைவர்கள் அஷுதோஷ் மற்றும் சஞ்யச் சிங் ஆகியோர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: நேருவின் புகழை சீர்குலைக்க நடக்கும் சதியே இக்கடிதம். சர்தார் பட்டேலை தூக்கிப்பிடித்து, பிற தலைவர்களை கீழே இறக்க அரசு முயலுகிறது. அதன் ஒரு பகுதியே இக்கடிதம்.
முழுமையாக வெளியிடுங்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில் சம்மந்தப்படாதவர்கள், நேரு மற்றும் காந்தியின் புகழை குலைக்க முயன்று வருகிறார்கள். நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட முடிவு செய்த மத்திய அரசு அதை முழுமையாக வெளியிட வேண்டும். மாதம் 25 ஆவணங்கள் என்ற வீதத்தில் அவற்றை வெளியிடுவது சரியில்லை.
சமாஜ்வாதி, பகுஜன்மீது பாய்ச்சல்
உத்தர பிரதேசத்தில் காட்டு ராஜ்யம் நடைபெறுகிறது. கொலைகள் அங்கு சாதாரணமாக உள்ளன. சமாஜ்வாதி கட்சி இவற்றை கண்டுகொள்ளவில்லை. ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்த விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி வாய் திறக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனற்.