நேபாள விமான விபத்து: விவாகரத்தான இந்திய தம்பதி மகன், மகளுடன் பலி.. "அந்த" 10 நாட்களால் வந்த சோகம்!
காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் இந்திய தம்பதி பிள்ளைகளுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து புறப்பட்டது.
இது புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. இந்த விமானத்தின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையில் மோதி விபத்து
அப்போது அந்த விமானம் மஸ்தாங் மாவட்ட மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானம் பள்ளத்தில் சிதறிக் கிடந்த நிலையில் அதில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் மீட்பு படையினர் 22 பேரின் உடல்களையும் மீட்டனர். அதில் நேபாளத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 பேர்
அது போல் இந்தியாவை சேர்ந்தவர் 4 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விமான நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் அசோக் குமார் திரிபாதி (54), அவரது மனைவி வைபவி பண்டேகர் (51), மகன் தனுஷ் திரிபாதி (22), மகள் ரித்திகா திரிபாதி (15) ஆகியோர் ஆவர்.

கருத்து வேறுபாடு
வைபவிக்கும் அசோக்குமாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகியுள்ளது. கோர்ட் உத்தரவின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் இவர்கள் கூடியிருக்க வேண்டும். அந்த உத்தரவின்படி 10 நாட்கள் விடுமுறைக்காக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் தாரா ஏர் விமானத்தில் பயணித்தனர்.

4 பேருமே பலி
தற்போது 4 பேருமே பலியாகிவிட்டனர். ஆண்டுக்கு 10 நாட்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அவர்களுக்கு எமனாக மாறிவிட்டது. வைபவி மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கிய பதவி வகித்து வந்தார். வைபவிக்கு 80 வயதான தாய் இருக்கிறார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை மும்பை வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் 4 பேரும் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களது இறப்பு அவரது தாய்க்கு தெரிவிக்கப்படவில்லை .












Click it and Unblock the Notifications