"அகர்வால் ஜாதியையே அவமானப்படுத்தி விட்டது பாஜக".. அஸ்திரத்தை கையில் எடுத்த கேஜ்ரிவால்!
டெல்லி: பாஜகவின் விளம்பர கார்டூனில் அகர்வால் ஜாதியை (வணிகர்கள்) தவறாக சித்தரித்துவிட்டதாக கூறி அஸ்திரம் ஏவியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லியில் பாஜகவின் வாக்கு வங்கியாக நீண்டகாலமாக இருந்து வரும் வணிக ஜாதியினரை பாஜக அவமதித்து விட்டதாக கேஜ்ரிவால் பேசியிருப்பதால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் புகழ் இன்னும் குறையவில்லை என்பதை, பாஜகவின் செயல்பாடுகளில் இருந்து குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும். அந்த அளவுக்கு கேஜ்ரிவாலை தாக்குவதில் பாஜக மிகுந்த மும்முரம் காட்டி வருகிறது.

கேஜ்ரிவால் மீது தாக்கு
பத்திரிகைகள், சுவர் ஒட்டிகளில் அளிக்கப்படும் விளம்பரங்களிலும், கேஜ்ரிவாலை கேலி செய்து கார்டூன்களை வெளியிட்டு வருகிறது பாஜக. அன்னா ஹசாரே போட்டோவை பிரேம் செய்து மாலை போட்டு வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மூத்த அமைச்சரான அருண்ஜேட்லி தலையிட்டு அந்த விளம்பரத்தை நீக்க செய்தார்.

ஜேட்லி தலையீடு
பாஜகவிடம் பிரச்சாரம் செய்ய எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. ஆம் ஆத்மியை போல நெகட்டிவ் பிரச்சாரம் பாஜகவுக்கு தேவையில்லை என்றும் ஜேட்லி அறிவுரை கூறியிருந்தார்.

வணிகர்களை அவமானப்படுத்திவிட்டது
ஆனாலும், ஆம்ஆத்மியின் அட்டாக்கை சமாளிக்க பதில் அட்டாக் செய்துவருகிறது பாஜக. ஆனால் அதை பாஜகவுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளார் கேஜ்ரிவால். தற்போது லேட்டஸ்டாக வெளியான விளம்பரத்தில், 'உபத்ரவி கோத்ரா' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பாயிண்ட்டைப் பிடித்துள்ளார் கேஜ்ரிவால்.

கொளுத்தி விட்ட கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால் வணிக சமுதயாத்தின் ஒரு பிரிவான அகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில், எனது குழந்தைகளை குறிவைத்து விளம்பரம் செய்தனர், பொறுத்துக் கொண்டேன். என்னை அசிங்கப்படுத்தினர், பொறுத்துக் கொண்டேன். தற்போது ஒட்டுமொத்த அகர்வால் இனத்தையுமே, உபத்ரவி (தொல்லை) என்று குறிப்பிட்டுள்ளனர்" என்று அரவிந்த் கேஜ்ரிவால் கொளுத்திப் போட்டுள்ளார்.

நானும் உங்க ஜாதிக்காரன்தானுங்க..
தேர்தல் பிரச்சாரத்தின்போதும், தான் ஒரு வைசிய அல்லது வணிகத்தை பின்பற்றும் ஜாதியை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டு வாக்கு கேட்டு வருகிறார் கேஜ்ரிவால். அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளித்த விவகாரத்தில் பாஜக மீது வணிகர்கள் அதிருப்தியிலுள்ளனர். இந்த விவகாரத்தையும் பிரச்சாரத்தில் கூறிவருகிறார் கேஜ்ரிவால்.

வாக்கு வங்கியில் ஆட்டம்
நீண்டகாலமாக வணிக சமுதாயத்தினர் டெல்லியில் பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ளனர். இப்போது பாஜக வெளியிட்டுள்ள விளம்பரம் மற்றும் அன்னிய முதலீடு ஆகிய இரு பிரச்சினைகளையும் முன்வைத்து, அந்த வாக்கு வங்கியில் குறிதவறாமல் ஓட்டை போட்டுள்ளார் கேஜ்ரிவால்.
தங்களது விளம்பரம் தங்களுக்கே எதிராக திரும்பி விடுமோ என்ற அச்சம் தற்போது பாஜகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications