புதிய இந்தியா மேப்பில் நம்ம மாநில தலைநகர் எங்கப்பா? அடித்து கொள்ளும் ஆந்திரா கட்சிகள்!
விசாகப்பட்டினம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியாவின் வரைபடத்தில் தங்களது மாநிலத்துக்கு தலைநகரே குறிப்பிடப்படாமல் இருப்பது ஆந்திரா அரசியல் கட்சிகளிடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து புதிய இந்திய வரைபடத்தை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

மத்திய அரசின் மேப்
இந்த வரைபடமானது மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதெல்லாம் நமது வரைபடத்தில் இனி இருக்காது.

ஜம்மு காஷ்மீர் அங்கம்
ஒருங்கிணைந்த காஷ்மீராக அது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசமாகத்தான் இனி இருக்கும் என்பதை திட்டவட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்த பகுதிகள் ஒருங்கிணைந்த காஷ்மீரின் அங்கம்தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் உள்ள நகரங்களும் இந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆந்திராவில் புகைச்சல்
இந்நிலையில் இந்த புதிய வரைபடமானது ஆந்திராவில் பெரும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்துக்கு தலைநகர் எது என்பது இந்த வரைபடத்தில் குறிப்பிடப்படவில்லை. இதனை முன்வைத்து ஆந்திரா மாநில ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசமும் பரஸ்பரமும் குற்றம்சாட்டி வருகின்றன.

அமராவதி இல்லை
தெலுங்குதேசம் ஆட்சியில் அமராவதி என்கிற புதிய தலைநகர் பிரமாண்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அது அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. அதனால்தான் மத்திய அரசின் வரைபடத்தில் அமராவதி இடம்பெறவில்லை என்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் குற்றச்சாட்டு.

ஆந்திரா அரசு மீது புகார்
அமராவதி தலைநகரம் திட்டத்தை கைவிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, ஏன் புதிய தலைநகரை இதுவரை தேர்வு செய்யவில்லை. இந்திய வரைபடத்திலேயே ஆந்திராவின் தலைநகர் இல்லாமல் போனதற்கு ஆந்திரா ஆளும் அரசுதான் காரணம் என்கிறது தெலுங்குதேசம்.












Click it and Unblock the Notifications