போலீஸ் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு எஸ்சி எஸ்டி மார்க்கிங்... இவங்கள எல்லாம் என்ன சார் பண்ணலாம்!
மத்திய பிரதேசத்தில் போலீஸ் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு எஸ்சி, எஸ்டி என்று மார்பில் குறியீடு போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
போபால்: ஜூரம் போவதற்காக ஒரு பாட்டிக்கு பத்து போடு என்றால், அவருடைய நெற்றியில் 10 என்று ஒரு படத்தில் வடிவேலு எழுதியிருப்பார். காமெடிக்கு வேண்டுமானால் இது ஓகே. ஆனால், போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர்களுக்கு இதுபோல் மார்க்கிங் செய்யும் மோசமான விஷயம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தர் மாவட்டத்தில் சமீபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான ஆட்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களின் மார்பில் எஸ்சி, எஸ்டி என்று குறியீடு போடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக படங்கள் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று மத்திய பிரதேச போலீஸ் டிஜிபி கூறியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையின்போது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு சில சலுகைகள் உள்ளன. அது தேர்வில் பங்கேற்போருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு குறியீடு போடப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.