மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்?
கொல்கத்தா: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வேட்பாளர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலைக் காலவரையின்றி தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், அதில் வாக்குப்பதிவுக்கு முன்னரே, ஜாங்கிபூர் தொகுதியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரதீப் நந்தி, சாம்செர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரெஜாயுல் ஹக்கும் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. 292 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து 3ஆவது முறை... நாளை மறுநாள் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
அதிகரிக்கும் கொரோனா
இதையடுத்து மீதமுள்ள இரண்டு தொகுதிகளிலும் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்குப் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தினால் எங்கு வைரஸ் பரவல் அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது.
காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வேட்பாளர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின்னர், தேர்தல் குறித்து அறிவித்து அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல்வராகும் மம்தா
மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேநேரம் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகாரம் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இருந்தாலும்கூட, மம்தா பானர்ஜி நாளை மறுநாள் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
மம்தாவுக்கு சிக்கல்
அவர் முதல்வராகப் பதவியேற்றாலும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆக வேண்டும். இல்லையென்றால் அவரது முதல்வர் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய தேர்தல் ஆணையத்தின் முடிவால் அவர் உடனடியாக இடைத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் 6 மாதங்களுக்கு மேலும் கால தாமதம் செய்தால் அவரது பதவிக்குச் சிக்கல் வரும்.