பொறுத்திருங்கள்.. சின்னம்மாவிடமிருந்து புது உத்தரவு வரப் போகுது.. கருணாஸ் பரபரப்பு தகவல்!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா தொண்டர்களுக்கு புதிய உத்தரவு போட உள்ளதாக கருணாஸ் எம்எம்ஏ தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனைப் பெற்று சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள், நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் மட்டுமே சசிகலாவை தொடக்கத்தில் சென்று பார்த்த வண்ணம் இருந்தனர். அதன் பிறகு அவரை யாரும் அவ்வளவாக சென்று பார்ப்பதில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நடிகர் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் ரமணா, மொளச்சூர் பெருமாள், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.

30 நிமிட சந்திப்பு
சுமார் 30 நிமிட நேர சந்திப்பில் அரசியல் நிலவரம் குறித்தும், கட்சி, ஆட்சி செயல்பாடு பற்றியும் சசிகலாவிடம் இவர்கள் பேசியுள்ளனர். அனைத்து விஷயங்களையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட சசிகலா சில கருத்துக்கு மட்டும் பதில் சொன்னதாக கருணாஸ் தெரிவித்தார்.

கூட்டணித் தலைவர்
கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவரை சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் மூலமாக சசிகலா தெரிந்து கொள்கிறார் என்று கருணாஸ் கூறினார்.

மனம் விட்டு..
கட்சி, ஆட்சியின் செயல்பாடு பற்றி சசிகலா மனம் விட்டு பேசினார். கட்சியும், ஆட்சியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக சசிகலா இருக்கிறார் என்று எம்எல்ஏ தெரிவித்தார்.

விரைவில் உத்தரவு
பெங்களூரு சிறையில் உள்ள அவரிடம் இருந்து விரைவில் கட்சித் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு வரும். இதுதொடர்பான அறிவிப்பை அவர் கடிதமாக எழுத இருக்கிறார் சசிகலா என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications