நாடு முழுவதும் இன்று முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமல்
டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி, குறைந்தபட்சம் 12 மாதத்திற்கு முன்பாக நிலம் கையகப்படுத்துவதின் தேவையை தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இச்சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்தும் காரணத்தையும் அதன் தேவையையும் 12 மாதங்களுக்கு முன்பாக நில உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் எனில், அந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மொத்த குடும்பங்களில் 70 சதவிகிதத்தினரின் சம்மதத்துடனும், தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டமென்றால், அத்திட்டத்தால் பாதிக்கப்படும் மொத்த குடும்பங்களில் 80 சதவிகிதத்தினரின் சம்மதம் பெற்றால்தான் நிலத்தை கையகப்படுத்த முடியும்.
கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான இழப்பீட்டை 2 ஆண்டுகளுக்குள் கொடுக்க வேண்டும். நிலத்தை பொது நோக்கத்துக்காக கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதிகளில், அப்போதைய மதிப்பில் 4 மடங்கு தொகையையும், நகர்புரங்களில், அன்றைய மதிப்பில் 2 மடங்கு தொகையும் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டும்.
இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு கடந்த செம்டம்பர் மாதம் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.