பரிதாபம்.. "வெப்ப கருவியில்" வெந்து பலியான பச்சிளம் குழந்தை.. நர்ஸ் கவனிக்க மறந்துட்டாராம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையில் வெப்பக் கருவியில் வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, அதிக அளவில் சூடேறி வெந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் உள்ள நர்ஸ்களின் அலட்சியத்தின் காரணமாகவே அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தொடரும் அலட்சியம்..
இந்தியாவில் சமீபகாலமாக மருத்துவமனைகளில் போதிய பராமரிப்பும், கண்காணிப்பும் இல்லாததால் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில்தான் இந்த அவலம் நிகழ்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 63-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ராஜஸ்தான் அரசு மருத்துவமனை
அந்த வகையில், ராஜஸ்தானில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு பச்சிளம் குழந்தை துடிதுடித்து இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்று வாரங்களுக்கு முன்பு நரேஷ் என்பவரின் மனைவி சுதா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இன்குபேட்டர்' கருவியில்..
அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருந்த போதிலும், அதன் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்தக் குழந்தையை என்ஐசியு எனப்படும் 'இன்குபேட்டர்' கருவியில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தனர். இந்தக் கருவியில் குழந்தையின் உடலை சூடாக்க குறிப்பிட்ட அளவில் வெப்பம் கொடுக்கப்படும். அதாவது, தாயின் கருப்பையில் உள்ள வெப்பத்துக்கு நிகரான சூட்டில் குழந்தை வைக்கப்படும். இதனால் அந்தக் குழந்தையின் எடை கூடுவதோடு, எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

உயர்ந்த வெப்பநிலை.. தகித்த குழந்தை..
இந்நிலையில், இன்குபேட்டரில் அந்தக் குழந்தையை நேற்று முன்தினம் வைத்த நர்ஸ்கள், அதில் உள்ள வெப்பநிலை அளவை கட்டுப்படுத்தும் ஸ்விட்ச்சை போடாமல் விட்டதாக தெரிகிறது. இதனால் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் கருவியில் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றுள்ளது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் குழந்தை கதறி துடித்துள்ளது. ஆனால் அங்கு நர்ஸ்கள் யாரும் இல்லாததால் அதன் அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லை.

வெந்து இறந்த பரிதாபம்
பின்னர் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகு அங்கு வந்த நர்ஸ்கள், இன்குபேட்டரில் குழந்தையின் அசைவு இல்லாததை கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அதை திறந்து பார்த்த போது, மிக அதிகமான வெப்பநிலை காரணமாக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வெந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் அங்கு பணியில் இருந்த அனைத்து நர்ஸ்களையும், மருத்துவப் பணியாளர்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications