வெள்ளத்தில் மூழ்கிய கேரளாவைத் துரத்தும் துயரம்.. அடுத்து வறட்சி வரப் போகுதாம்!
Recommended Video

திருவனந்தபுரம்: சென்னையை அப்படி சுழற்றியடித்தது பெருவெள்ளம். உலகமே பார்த்து வேதனைப்பட்டது. ஆனால் அத்தனை தண்ணீரும் பலன் தராமல் வீணாகத்தான் போனது. இன்று அதே நிலையை கேரளாவும் சந்தித்துள்ளது. மிகப் பெரிய வெள்ளப் பாதிப்பை சந்தித்த கேரளா தற்போது வறட்சியின் பிடியில் விழுந்து வருகிறதாம்.
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரு வெள்ளம் மாநிலத்தைப் புரட்டிப் போட்டது. பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. மாநிலமே பெரும் சேதத்தை சந்தித்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்தன. இன்னும் கூட இந்த சோகத்திலிருந்து கேரளா முழுமையாக மீண்டு வரவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த சோகம் தேடி வந்து விட்டது.
ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு 250 சதவீத கூடுதல் மழைப் பொழிவை பெற்ற கேரளா இப்போது மிகப் பெரிய வறட்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மழை குறைந்து விட்டது
செப்டம்பர் முதல் வாரத்தில் இயல்பை விட 86% குறைந்த அளவிலான மழையையே கேரளா பெற்றுள்ளதாம். அதாவது மொத்தமே 7.9 மில்லி மீட்டர் அளவிலான மழைதான் பெய்துள்ளதாம். பெரு வெள்ளத்தால் மேல் மண் பெரிய அளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில் நிலத்தடி நீரும் பெருமளவில் குறைந்துபோயுள்ள நிலையில் இந்த குறைந்த மழைப் பொழிவு வறட்சிக்கே வித்திடும் என்று கூறுகிறார்கள். மேலும் வெப்ப நிலையும் உயர்ந்துள்ளது.

மழையால் பலன் இல்லை
கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் மழை பெய்ததே காரணம் என்று அனைத்து நிபுணர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர். அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் பெருவெள்ளம் ஏற்படவில்லை என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆகஸ்ட்டில் புரட்டிப் போட்ட பெரு மழை யாரும் எதிர்பாராத வகையில் செப்டம்பரில் குறைந்து போய் தற்போது கிட்டத்தட்ட நின்று விட்டது.

மேல் மண் காலி
தென் மேற்குப் பருவ மழைக்காலம் இன்னும் கேரளாவில் முடியவில்லை. ஆனால் மழை நின்று போயிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கவலைக்கு முக்கியக் காரணம், பெரு வெள்ளத்தால் மாநிலம் முழுவதுமே மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. நிலத்தடி நீரும் குறைந்தே காணப்படுகிறது. இந்த நேரத்தில் மழைப் பொழிவு நின்று விட்டதால் இது வறட்சிக்கே வித்திடும் என்று சொல்கிறார்கள்.

ஹீட் அதிகரிக்கிறது
இன்னும் மோசமான ஒரு செய்தியாக வெப்ப நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் இப்போதே வறட்சி தென்படத் தொடங்கி விட்டதாம். இந்த மாத இறுதியில் மீண்டும் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் விவசாயப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

வயநாட்டின் பரிதாபம்
வடக்கு கேரளாவில் (வயநாடு - இங்குதான் அதிக அளவில் நெல் வயல்கள் உள்ளன) பெரு மழை காரணமாக மண் புழுக்கள் கிட்டத்தட்ட அழிந்து போய் விட்டதாம். இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். மண்புழுக்கள்தான் மண்ணை செம்மைப்படுத்தி உயிரோட்டத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் சிறு கடன், குறு கடன் வாங்கவும் வழியில்லாத நிலையில் உள்ளனராம் விவசாயிகள்.
மொத்தத்தில் கேரளாவில் வெள்ளம் வடிந்து விட்டது.. ஆனால் துயரங்களுக்கு என்று விடிவு என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications