தனிப்பட்ட காரணத்திற்காக என்ஐஏ அதிகாரி கொல்லப்பட்டதாக தெரியவில்லை - உ.பி. போலீஸ்
லக்னோ: உ.பி. மாநிலம் பிஜ்னூரில் அடையாளம் தெரியாத 2 நபர்களால் தேசிய புலனாய்வு ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரி முகமது டான்ஸில் சுட்டுக் கொல்லப்பட்டதில் தனிப்பட்ட விரோதம் எதுவும் மறைந்திருப்பதாக தெரியவில்லை என்று உ.பி. போலீஸார் கூறியுள்ளனர். இதனால் அவரை சுட்டுக் கொன்றவர்கள் தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டிஎஸ்பியாக இருந்தவர் டான்ஸில். திறமையான போலீஸ் அதிகாரியாக வலம் வந்தவர். தேசிய புலனாய்வு ஏஜென்சியில் சேர்க்கப்பட்ட இவர் தற்போது பதன்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
நேற்று தனது மனைவி, குழந்தையுடன் திருமணம் ஒன்றுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சரமாரியாக துப்பாக்கிச் சூடு
அவரது உடலில் 21 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் சல்லடையாக துளைத்தெடுத்துள்ளனர்.

எல்லைகள் சீல் வைப்பு
டான்ஸிலை சுட்டுக் கொன்ற இரு நபர்களையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். பிஜ்னூர் நகர எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட படுகொலை
இந்தக் கொலை குறித்து என்ஐஏ ஐஜி சஞ்சீவ் குமார் கூறுகையில் இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும். இருப்பினும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அனைத்து கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
|
தனிப்பட்ட காரணத்திற்காக அல்ல
இதற்கிடையே, முன்விரோதம், தனிப்பட்ட விரோதம் என வழக்கமான காரணங்கள் இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பதாக தெரியவில்லை என்று போலீ் தரப்பில் கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் காரணமா?
பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் இவர் விசாரணையில் ஈடுபட்டிருந்ததால், தீவிரவாத இயக்கம் ஏதும் இந்தக் கொலையின் பின்னணியில் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சிமி மீது சந்தேகம்
பிஜ்னூரில் சிமி இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு அங்கு சிமி இயக்கத்தினர் குண்டுவெடிப்பை நடத்தினர். அதுதொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது. எனவே சிமி இயக்கத்தினர் என்ஐஏக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டான்ஸிலை கொன்றனாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

3 வழக்குகளில் தொடர்புடையவர்
கொல்லப்பட்ட டான்ஸில் 3 முக்கியமான வழக்குகளில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. எனவே அந்த வழக்கு தொடர்பான யாரேனும் கொலையைச் செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

நேர்மையான, கண்டிப்பான அதிகாரி
டான்ஸில் மிகுந்த துணிச்சலான அதிகாரியாம். நேர்மையானவர், கண்டிப்பானவர். யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் கூறுகிறார்கள். திறமையான அதிகாரியான அவர் அதேசமயம் கனிவாகவும் பழகும் குணம் உடையவராம்.












Click it and Unblock the Notifications