உருட்டு கட்டைகளுடன் வந்த பெண்கள்.. என்ஏஐ அதிகாரிகள் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகளின் காரை உருட்டு கட்டைகளுடன் வந்த பெண்கள் வழி மறித்தனர். அதோடு கார் மீது செங்கல், கல் வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடி உடைந்ததோடு, அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிட்னாபூர் மாவட்டம் பூபதிநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட நார்யாபில்லா கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது.

இதில் 3 பேர் பலியாகினர். இதுபற்றி மேற்கு வங்க போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டு ஜுன் மாதம் என்ஐஏவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வழக்கு தொடர்பாக இன்று காலையில் 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் பூபதிநகர் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். இதுபற்றி அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்றாக திரண்டு வந்தனர். கிராமத்துக்குள் என்ஐஏ அதிகாரிகளை விடாமல் அவர்கள் தடுத்தனர்.
மேலும் என்ஐஏ அதிகாரிகள் வந்த கார் மீது செங்கல், கற்களை வீசினர். இதில் காரின் கண்ணாடி சேதமடைந்தது. மேலும் ஒரு என்ஐஏ அதிகாரி காயமடைந்தார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனாலும் கிராம மக்கள் விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் கைகளில் உருட்டு கட்டைகளை வைத்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதுதொடர்பாக என்ஐஏ சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். காயமடைந்த என்ஐஏ அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‛‛நாங்கள் விசாரணைக்கு வருவது பற்றி போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தோம். ஆனால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்றனர்.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை விசாரணைக்கு செல்லும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது கடந்த ஜனவரி 5ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் செய்க் ஷாஜகானிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அவரது கூட்டாளிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications