மினி பஸ் மீது கேஸ் லாரி மோதி 9 பேர் சாவு
மைசூர்: மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சோக சம்பவம் மைசூர் அருகே இன்று நடந்துள்ளது.
மைசூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியபட்டணா அருகே இன்று காலை மினி பஸ் ஒன்று மங்களூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிய லாரி அதன் மீது மோதியதில், மினி பஸ்சில் இருந்த நான்கு பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மங்களூர் நகரின் தெர்லகட்டே என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் எஸ்.பி., அபினவ் காரே, இருவாகனங்களின் டிரைவர்களின் அஜாக்கிரதையால்தான் இந்த விபத்து நடந்ததாக கூறினார்.
மேலும், மினி பஸ் டிரைவர் இறந்துவிட்ட நிலையில், காயமடைந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.