இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'நிர்பயா' ஏவுகணை சோதனை தோல்வி
ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஐடிஆர் ஏவுதளத்தில் நிர்பயா ஏவுகணை சோதனை இன்று நடத்தப்பட்டது.
புவனேஷ்வர்: தொழில்நுட்ப கோளாறால் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'நிர்பயா' ஏவுகணையின் 4-வது சோதனை தோல்வியில் முடிந்தது.
ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஐடிஆர் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இன்று ஏவப்பட்ட ஏவுகணையானது நிர்ணயக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ராணுவ அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை புறப்படும் நிலையில் இருந்தபோது அதன் ஆரம்பக்கட்ட இன்ஜின் சரியாக வேலை செய்தது. ஆனால் ஏவுதளத்தில் இருந்து அது விலகியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அடுத்த 2 நிமிடங்களில் இலக்கை எட்டாமல் கீழே விழுந்துவிட்டது என்றார். இதுவரை நான்குமுறை நிர்பயா ஏவுகணை சோதிக்கப்பட்டது.
முதல்முறையாக 2013ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஏவப்பட்ட போது அடிப்படை இலக்குகளை வெற்றிகரமாக எட்டிய ஏவுகணை 20 நிமிட பயணப்பாதையைத் தாண்டிய நிலையில் அதன் ஏவு பாதையில் இருந்து விலகியது. அதனால் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற்ற சோதனையானது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 3-வது முறையாக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி நடைபெற்றது அப்போது பாதுகாப்பு எல்லைக்குள் விமானம் போன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. நிர்பயா ஏவுகணையை வான், நிலம், கடல் ஆகிய 3 இடங்களில் இருந்தும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications