மோடி - ஜெயலலிதா சந்திப்பில் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை: நிர்மலா சீதாராமன்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அதிமுக எம்.பிக்கள், ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தமிழ்நாடு இல்லம் சென்ற ஜெயலலிதா சிறிது நேர ஓய்வு எடுத்தார். அதன் பின்னர் மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றார் ஜெயலலிதா. அங்கு தமிழக திட்டங்கள் தொடர்பான 29 கோரிக்கைகள் அடங்கிய 96 பக்கம் கொண்ட மனுவை நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
பின்னர் மாலை தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய ஜெயலலிதாவை, மத்திய தொழிற்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசின் பங்கு குறித்து தமிழக முதல்வரிடம் பேசினேன்.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வரை மத்திய அரசின் நிதியுதவுடன் கடல்வழி சரக்கு போக்குவரத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்றொரு பெரிய துறைமுகமான தூத்துக்குடி வரை நீர்வழி சரக்கு போக்குவரத்திற்கான பாதை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மேம்படும் எனவே தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காக அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய சந்தைகளை உருவாக்குவது பற்றியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது பற்றியும் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் அரசியல் ஏதும் இல்லை எனவும் பாஜக மற்றும் அதிமுக இடையே எந்த அரசியல் கூட்டணி குறித்தும் பேசவில்லை எனவும் அவர் கூறினார்.