அத்வானியை நாங்க யாரும் அவமதிக்கவில்லையே: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
பெங்களூரு: பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானியை யாரும் அவமரியாதையாக நடத்தவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை விளக்குவதற்காக பெங்களூரு பசவனகுடியில் உள்ள தேசியக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பிரஹலாத் ஜோஷி, அனந்த்குமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு மைசூரு தலைப்பாகை, சால்வை, மாலை அணிவித்து கெளரவித்தனர்.

ஆனால் மேடையில் இருந்த மூத்த தலைவர் அத்வானியை யாரும் கெளரவிக்கவில்லை. மேலும் கையை உயர்த்தி மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தியபோதும் அத்வானியை அதில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதேபோல் இந்த கூட்டத்தில் அத்வானிக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை.
பெங்களூரு லலித் அசோக் ஹோட்டலில் 2வது நாள் நடைபெற்ற கூட்டத்திலும் அத்வானிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இது அத்வானிக்கு மட்டுமல்லாமல், கட்சியின் மூத்த தலைவர்கள், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, அத்வானி, கட்சியின் மூத்த தலைவர். அவர் எங்களது வழிகாட்டி. தேசிய செயற்குழுவில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
அத்வானி மீது எங்களுக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு. அவரை யாரும் அவமதிக்கவில்லை. அப்படி கூறுவதையும் ஏற்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications