சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன் சுரிந்தர் கோலிக்கு 12ம் தேதி தூக்கு!
டெல்லி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று குவித்த குற்றவாளி சுரிந்தர் கோலி 12ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளார். தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா அடுத்த, நிதாரி பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு சிறுமி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, சுரிந்தர் கோலி என்பவர் சிறுமியைக் கொன்றதும், இதேபோல் 2005 முதல் 2006க்கு இடைப்பட்ட காலத்தில் மேலும் பல சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

கொலை செய்த சிறுமிகளை தனக்கு வேலை அளித்திருந்த தொழிலதிபர் மோனிந்தர் சிங் என்பவரின் பண்ணை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மோனிந்தர் சிங் மற்றும் அவரின் வேலைக்காரரான சுரிந்தர் சிங் கோலி ஆகிய இருவரும், 16க்கும் மேற்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை அழித்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கோலி மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 5 வழக்குகளில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கீழ் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தசூழலில், கடந்த ஜூலை மாதம் சுரிந்தர் கோலியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கியுள்ள 42 வயதேயான சுரிந்தர் கோலி, தற்போது காசியாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற 12 ஆம் தேதி மீரட் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைக் கண்காணிப்பாளர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். காஜியாபாத் செஷன்ஸ் கோர்ட் இதற்கான 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications