கம்யூனிஸ்டுகளைத்தான் திட்டினேன்.. கன்னடர்களை விமர்சிக்கலையே: சொல்வது நித்தியானந்தா
பெங்களூர்: கன்னட அமைப்புகள் பணத்தை வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்று தாம் கூறவில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் விமர்சித்தேன் என்றும் சர்ச்சை சாமியார் விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சை சாமியார் அண்மையில் கன்னட அமைப்புகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பணத்துக்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
இதில் கொந்தளித்துப் போன கன்னட அமைப்புகள் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். அப்போது நித்யானந்தாவை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாமியார் நித்யானந்தாவை கைது செய்து ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என கடந்த திங்கள்கிழமை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவரை தேடி ஹரித்துவாருக்கு கர்நாடக போலீசார் சென்றுள்ளனர்.
கன்னடர்களை அல்ல.. கம்யூனிஸ்டுகளைத்தான்..
இத்தனை களேபரத்துக்கு மத்தியில் நித்தியானந்தா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் கன்னட அமைப்பினரை விமர்சிக்க வில்லை. சிறுவயதில் திருவண்ணா மலையில் இருக்கும் போது கொடியை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகளை தான் திட்டினேன்.
50 பேர் கூட்டமாக கூடி அதுவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொடியை தூக்கிக் கொண்டு தொழில் ரீதியாக போராட்டம் நடத்துவர்கள். வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக கூச்சல் போடுவார்கள்.
ஒரு பிரச்சினை முடிவதற்குள் இன்னொரு பிரச்சினைக்கு தாவி விடுவார்கள். அவர்களுடைய குறிக்கோள் பணம் தான். பணம் பட்டுவாடா செய்யப்பட்டப் பின் காணாமல் போய்விடுவார்கள்.
இதனை நான் திருவண்ணாமலையில் பார்த்திருக்கிறேன். அதைத்தான் கூறினேன். ஆனால் கன்னட தொலைக்காட்சிகள் தவறாக வெளியிட்டுள்ளன.
கன்னட மக்களை என்னுடைய மக்களாக கருதுவதால் ஒருபோதும் அவர்களை பற்றி தவறாக பேசமாட்டேன்.
இவ்வாறு நித்தியானந்தா கூறியுள்ளார்.
இனி கம்யூனிஸ்டுகள் களத்துக்கு வர வேண்டும் போல!