அவர் வந்தால் இரண்டே மணி நேரம்தான்.. ஓவர்.. ஆர்எஸ்எஸ்சுக்கு சிவசேனா கடிதம்.. பாஜகவும் எதிர்பார்ப்பு
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் இடையே அரசு அமைப்பதில் நிலவிவரும் இழுபறி நிலையை சரி செய்வதற்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி களமிறங்கியுள்ளார்.
இவர், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதோடு மட்டுமின்றி, பாஜகவின் ட்ரபிள் ஷூட்டர் என்று அழைக்கப்படுபவர் நிதின் கட்கரி.
அயோத்தி தீர்ப்பு நெருங்கிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், கூடிய விரைவில் மகாராஷ்டிராவில் அரசு அமைக்கப்பட வேண்டும் என்பதால் கட்காரியை பாஜக மலைபோல நம்பிக்கொண்டு இருக்கிறது.

மோகன் பகவத் சந்திப்பு
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் நேற்று மகாராஷ்டிர மாநில காபந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு அமைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கியுள்ளார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் கூடிய வரையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் படி மோகன் பகவத், பட்னாவிசிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்எஸ்எஸ் உதவி
இந்த சந்திப்பின்போதுதான், நிதின்கட்கரி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மோகன் பகவத்திடம் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். பாஜக மட்டுமின்றி இந்துத்துவா கட்சி என்பதால், சிவசேனாவும் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் உதவியை நாடியுள்ளது.

சிவ சேனா கோரிக்கை
விவசாய போராட்டக்காரரான, கிஷோர் திவாரி சமீபத்தில் சிவ சேனாவில் இணைந்தார். இவர் மோகன் பகவத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் நிலவிவரும் இழுபறி நிலை குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைதியாக இருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிதின் கட்கரி நினைத்தால் 2 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்த்துவிடுவார். இதை ஆர்எஸ்எஸ் தலைமை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கள நிலவரம்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வர் பதவி தங்களுக்கு, தேவை என்று சிவ சேனா வலியுறுத்துவதால், பாஜக சிவசேனா கூட்டணி தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications