பீகார் ‘பரம ஏழைகளின்’ மாநிலம்.. சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.. நிதிஷ்குமார் புதிய முழக்கம்!
பாட்னா: பீகார் மாநில ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஏழைகள் அதிகம் இருப்பது உறுதியாகி உள்ளது; ஆகையால் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பீகார் மாநில சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களைத் தாக்கல் செய்து முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம். இவை போலியான விவாதங்கள்.

நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்குமான கொள்கையை உருவாக்க முடியும். பீகாரில் ஏழைகள் அதிகம் உள்ளனர் என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. ஆகையால் ஏழைகள் நிறைந்த பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
1980களில் ஜெயில்சிங் ஜனாதிபதியாக இருந்த போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து என்னுடன் விவாதித்தார். அப்போது முதலே என் மன ஓட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இருந்து வருகிறது. 2019-ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டும் அப்படியே ஒரு மசோதாவை அனுப்பினோம். ஆனால் கொரோனா குறுக்கிட்டது. இப்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி முடித்துவிட்டோம். உச்சநீதிமன்றம் கூட இதில் தாங்கள் தலையிடப் போவது இல்லை என தெரிவித்துவிட்டது.
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், 59.13% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர்; சுமார் 40 லட்சம் பேர் குடிசைகளில் வாழ்கின்றனர். 63,850 பேருக்கு வீடுகளே இல்லை. பீகாரில் 94 லட்சம் பேர் ஏழ்மையில் வாடுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார்.
பீகார் அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி கூறுகையில், பீகார் மாநிலம் 79.70% கல்வி அறிவு பெற்றுள்ளது. ஆண்களை விட பீகாரில் பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். பீகாரில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 953 பெண்கள் விகிதம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications