‛‛ரொம்ப நல்லது’’..‛இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறும் நிதிஷ் குமார்! கூலாக மம்தா சொன்ன பதில்!
கொல்கத்தா: ‛‛பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்பது நல்ல விடுதலை. அவர் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தால் பீகார் நாடாளுமன்ற தேர்தலில் 6 முதல் 7 சீட் மட்டுமே கிடைத்து இருக்கும். இப்போது அவர் வெளியேறியது நல்லது தான்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பாக கூறியுள்ளார்.
‛இந்தியா' கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். ஆனால் சமீபகாலமாக அவர் ‛இந்தியா' கூட்டணியை விரும்பவில்லை. தன்னை பிரதமர் வேட்பாளர், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யாத கடுப்பில் நிதிஷ் குமார் இருந்தார்.

இதற்கிடையே தான் அவர் விரைவில் ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறுவார் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கின. அதன்படி நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருகிறார். பீகார் முதல்வராக உள்ள அவர் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடனான கூட்டணியை முறித்து கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் நாளை நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ‛இந்தியா' கூட்டணிக்கும், அவருக்கும் இடையேயான உறவு என்பது முற்றிலுமாக முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி வைத்து ‛இந்தியா' கூட்டணிக்கு முழுக்கு போட உள்ளது பற்றி மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது குடியரசு தினத்தையொட்டி நேற்று மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் தேநீர் விருந்து வழங்கினார். இதில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் தனது நெருக்கமானவர்களிடம் பீகார் அரசியல் சூழல் மற்றும் ‛இந்தியா' கூட்டணியை விட்டு நிதிஷ் குமார் வெளியே செல்வது பற்றி பேசியுள்ளார்.
அப்போது மம்தா பானர்ஜி, ‛‛பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறுவது ‛இந்தியா' கூட்டணிக்கு நல்ல விடுதலை. இது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நல்லதாகவே அமையும். ஏனென்றால் பீகாரில் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் சில தொகுதிகளை இழக்க நேரிட்டு இருக்கும். ஆனால் அவரது வெளியேற்றம் என்பது நல்லது தான்'' என தனக்கு நெருக்கமானவர்களிடம் மம்தா பானர்ஜி கூறியுள்ளா்.
மேலும் மம்தா பானர்ஜியிடம் பத்திரிகையாளர்கள் நிதிஷ் குமார் பற்றி கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், ‛‛பீகார் மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறினால் அது ஆர்ஜேடி-காங்கிரசுக்கு நஷ்டமாக இருக்காது. அவர்கள் ஜேடியூவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும்போது இருந்தால் 6 முதல் 7 தொகுதிகளுக்கு மேல் (பீகாரில் 40 நாடாளுமன்ற தொகுதிகள்) கிடைக்காது" என தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி கூறினார். ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மம்தா பானர்ஜி இப்படி அறிவித்து இருந்தார். ஆனால் கூட தான் தொடர்ந்து ‛இந்தியா' கூட்டணியில் இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications