மாடுகளை பராமரிக்க ஆர்.எஸ்.எஸ். "ஷாகா"க்கள் நடத்தட்டும்...: நிதிஷ்குமார் 'பொளேர்'
கான்பூர்: மாடுகளைப் பற்றி கவலை கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவற்றைப் பாதுகாக்க தனி ஷாகாக்களை நடத்தட்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் குர்மி இனத்தவர் அதிகம் வாழும் மூசாநகரில் நடைபெற்ற பேரணியில் நிதிஷ்குமார் பேசியதாவது:
கான்பூர் வரும் வழியில் மாடுகள் சாலைகளில் திரிந்து கொண்டிருந்தன. மாட்டிறைச்சி சாப்பிடுவோர் மீது தாக்குதல் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு இந்த மாடுகளைப் பராமரிக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மாடுகளைப் பாதுகாப்பது பற்றி பேசிவருகிறது. அப்படி மாடுகள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமேயானால் நீங்கள் நடத்தும் பயிற்சி முகாம்களான 'ஷாகாக்களில்' வைத்து பராமரியுங்கள்... விவசாயிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் விளைநிலங்களில் அவற்றை மேயவிடாதீர்கள்..
ஷூக்கள் அணியாதீர்...
பாரதிய ஜனதா தொண்டர்கள், தலைவர்கள் அணிந்துள்ள ஷூக்களை ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் படம் எடுக்க வேண்டும். அவர்களிடம் இது "மாட்டு தோலால் தலித்துகளால் தயாரிக்கப்பட்டது... ஆகையால் இதை நீங்கள் அணியாமல் கழற்றிவிடுங்கள்" என சொல்ல வேண்டும்.
ஹிந்துத்துவா இல்லாத இந்தியா
பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் இந்த நாட்டின் சுமூகமான சூழலை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. ஆகையால்தான் நான் ஹிந்துத்துவா அமைப்புகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பாஜகவை எதிர்கொள்ள...
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடும். மதுவிலக்கை முன்வைத்து நாங்கள் இத்தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் இது ஒத்திகைதான்.... எங்களது இலக்கே 2019 மக்களவைத் தேர்தல்தான். உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் சமாஜ்வாடி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியுடன் மோதவில்லை. நாங்கள் பாரதிய ஜனதாவுடன்தான் மோதுகிறோம்.
கங்கை தாய் காத்திருக்கிறாள்...
பிரதமர் நரேந்திர மோடி கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். அண்மையில் அவரது வாரணாசி லோக்சபா தொகுதிக்கு சென்றிருந்தேன். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தில் எந்த ஒரு மாற்றமும் மோடியின் ஆட்சிக் காலத்தில் நடந்துவிடவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரையில் மோடிஜி எங்கே? கங்கைதாய் மோடிக்காக காத்திருக்கிறாள்... என்றுதான் கூறுகின்றனர்.