எங்க கிட்ட மட்டும்தான் சொத்து இருக்கா? நிதிஷ் கிட்ட இல்லையா? -ரப்ரி ஆவேசம்
லல்லு பிரசாத் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள். நிதிஷ் குமார் சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தயாரா? என்று லாலுவின் மனைவி ரப்ரிதேவி கேட்டுள்ளார்.
பாட்னா: என் மகன்கள் மீது நிதிஷ்குமாருக்கு பொறாமை. அதனால்தான் அவர் என் மகன்களிடம் குறி வைத்து விளையாடி விட்டார் என்று லாலுவின் மனைவி ரப்ரிதேவி குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில்வே கேண்டீன் ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி பதவி விலகாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். நிதிஷ்குமாரின் செயலை, லாலுபிரசாத் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசியுள்ள ரப்ரிதேவி, துணை முதல்வராக இருந்த என் மகன் தேஜஸ்வி, நாட்டு மக்களுக்காக நல்லது செய்து வந்தான். எனது இன்னொரு மகனும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறான்.
எனது மகன்கள் நாட்டு மக்களுக்கு உழைப்பது நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. என் மகன்கள் மீது அவருக்கு பொறாமை. அதனால்தான் அவர் என் மகன்களிடம் குறி வைத்து விளையாடி விட்டார் என்று குற்றம் சாட்டினார்.
பாஜகவுடன் சேர்ந்து இந்த சதி திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இப்போது யாரிடம் தான் சொத்துக்கள் இல்லை? நிதிஷ் குமார் சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தயாரா? லல்லு பிரசாத் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள் என்று கேட்டார் ரப்ரிதேவி.