மோடி உட்கார்ந்த சேரை விலைக்கு வாங்க ஆளில்லையாம்!
ஆக்ரா: நரேந்திர மோடி உட்கார்ந்த சேரை விற்க முடிவு செய்தனர் சிலர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே அதை வாங்க முன்வரவில்லையாம். இதனால் ஏற்பாடு செய்தவர்கள் ஏமாந்து போய் விட்டனராம்.
சமீபத்தில் ஆக்ராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி. அப்போது மேடையில் அவர் உட்கார்ந்த இருக்கையை விற்பனைக்கு விட தீர்மானிக்கப்பட்டது. மோடிக்கு நல்ல கிராக்கி இருப்பதால் நிச்சயம் இந்த சேருக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பினார்கள்.
ஆனால் துரதிர்ஷ்வசமாக சேரை வாங்க யாருமே முன்வரவில்லை. முதலில் ஆக்ராவைச் சேர்ந்த எம்.பி. ராம்சங்கர் கத்தேரியா சேரை வாங்க விருப்பம் காட்டியதாக செய்திகள் வெளியாகின.

அதேபோல எம்.எல்.ஏக்கள் யோகேந்திர உபாத்யாயா, ஜகன் கார்க் ஆகியோரும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உடனடியாக மறுத்து விட்டார் கத்தேரியா. அப்படியெல்லாம் எனக்கு ஆசை இல்லை. இது மீடியாக்களின் கதை என்று கூறி விட்டார் கத்தேரியா.
அதேபோல பாஜகவைச் சேர்ந்த கெளஸ்லேந்திரா செளஹான் என்பவர் ரூ. 10 லட்சத்திற்கு அதை வாங்கப் போவதாக செய்திகள் பரவின. ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிக் கொண்டு ஜகா வாங்கி விட்டார்ச செளஹான்.
இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம் விற்பனைக்கு ஏற்பாடு செய்த பாஜகவினர் சிலர். இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல மோடி உட்கார்ந்த சேராச்சே, விலை மதிப்பில்லாதது இது.. எனவேதான் பெரிய தொகைக்கு இதை வாங்க ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. ஹி.ஹி.ஹி.ஹி என்று கூறி வருகின்றனராம்.
இதற்கிடையே, இந்த சேர் விற்பனைக்கும், மாவட்ட பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று படு ஜாக்கிரதையாக விளக்கியுள்ளார் மாவட்ட பாஜக தலைவர் புருஷோத்தம் கேந்தல்வால்.
இதற்கு முன்பு ஜான்சியில் நடந்த கூட்டத்தின்போது மோடி பயன்படுத்திய சோபாவையும் இப்படித்தான் விலைக்கு விட்டனர். பெரிய தொகைக்கு அதைக் கூறி வந்தனர். ஆனால் ரூ. 30,000க்கு மேல் ஒருவரும் அதை கேட்கவில்லை. மேலும் அதையும் வாங்கவும் ஆளே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் என்றால் உடனே பெரும் விலைக்குப் போயிருக்கும்.. மோடி உட்கார்ந்த சேராச்சே.. கொஞ்சம் கஷ்டம்தான்.












Click it and Unblock the Notifications