எந்த சதியாலும் திரினாமுல் காங்கிரஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது: பாஜக மீது மம்தா தாக்கு
டெல்லி: எந்த சதியாலும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக சிட்பண்ட் நிறுவன தலைவர் சுதிப்தா சென் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மோடி அரசு தங்களை பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். ‘முடிந்தால், என்னை கைது செய்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள், எங்களை தாக்கினால், திருப்பித் தாக்குவோம்' என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.க்கு எதிராக கொல்கத்தாவில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
பேரணியில் சாரதா சிட்பாண்ட் மோசடி குறித்து பேசிய மம்தா பானர்ஜி பேசுகையில், "வெளியில் இருந்து வந்து கட்சியில் இணைந்து ஓரிருவர் தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டுவது சரியில்லை டெல்லியில் ஆட்சி செய்பவர்களால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது. வங்க தேசத்தினர் நமது அண்டைய நாட்டவர்கள் மற்றும் சகோதரர்கள். தீவிரவாதிகள் எந்த நாட்டையோ அல்லது மதத்தினையோ சேர்ந்தவர்கள் இல்லை" என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியொன்றில் பேசிய மம்தா பானர்ஜி "எங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை எடுத்து செல்வதை எத்தகைய சதி திட்டங்களாலும் தடுக்க முடியாது என்பதை நான் அவர்களுக்கு காட்டுவேன். மக்களுக்காக நாங்கள் உழைக்கும்போது சதிச் செயல்களால் அவர்களால் வெற்றிகரமாக வளர முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications