உத்தரகண்ட் வெள்ளம்... சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஐடிபிபி தகவல்
டேராடூன்: தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை இதுவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தோ திபத் போலீஸ் படை தெரிவித்துள்ளது.
உத்தரகண்டிலுள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பனிப்பாறை வெடித்ததில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் தபோவன் நீர்மின் நிலைய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 150 பேர் மாயமாகினர்.
அவர்களில் உயிரிழந்த நிலையில் 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களைத் தேடும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இந்தோ திபத் போலீஸ் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
இந்த திடீர் வெள்ளம் காரணமாக தபோவன் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 35 பேர் உள்ளே சிக்கிக் கொண்டர். அவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தின் முகப்பிலுள்ள பாறைகள் மற்றும் சேறு நீக்கப்பட்டவுடன் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று உத்தரகண்ட் காவல் துறை ஆணையர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தீவிரம்
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகளை மாநில பேரிடம் மீட்புப் படையினரும் இந்தோ திபத் போலீஸ் படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். சுரங்கத்தில் துளையிட்டு, உள்ளே இருப்பவர்களை மீட்க முயல்வதாக உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள முடியவில்லை
அவர்களை உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்றும் இருப்பினும், தற்போது வரை உள்ளே சிக்கியுள்ளவர்களை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தோ திபத் போலீஸ் படை தெரிவித்துள்ளது. முன்னதாக, அருகிலிருந்து சிறிய சுரங்கத்தில் இருந்து 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
35 உடல்கள் மீட்பு
தற்போது வரை, இந்த வெள்ளத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.