ஹைதராபாத்தில் ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
ஹைதராபாத்: ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் என்ற புதிய சட்டம் ஹைதராபாத் நகரில் இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதை வாகன ஓட்டிகள் சரிவர பின்பற்றவில்லை. இதனால் தினமும் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

இதையடுத்து ஹெல்மெட் கட்டாய சட்டத்தை தீவிரப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக போக்குவரத்து, சட்டம் - ஒழுங்கு போலீசார் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது.
இதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த விதிமுறை தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஹைதராபாத் நகரில் இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.
இச்சட்டத்திற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒருசிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொதுமக்களின் இடர்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் ஒடிஸா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications