செல்லாத நோட்டுகளை மாற்றப் போறீங்களா? அடையாள அட்டை ஒரிஜனல் போதும்.. ஜெராக்ஸ் தேவை இல்லை!
செல்லாத ரூபாய் தாள்களை மாற்ற அடையாள அட்டையின் ஜெராக்ஸ் தேவை இல்லை என்கிறது ரிசர்வ் வங்கி.
மும்பை: செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும்போது வங்கிகளில் ஒரிஜனல் அடையாள அட்டை ஒன்றை காண்பித்தாலே போதும்; அதன் ஜெராக்ஸ் காப்பி எதுவும் தரத் தேவை இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அந்த நேரம் முதலே இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.
கடந்த 9 நாட்களாக தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுக்க முடியாமலும் தத்தளித்து வருகின்றனர். நாள்தோறும் மணிக்கணக்கில் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நிற்க வேண்டிய கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.
அத்துடன் வங்கிகளில் பணத்தை மாற்ற செல்லும் போது, ஆதார் கார்டு ஜெராக்ஸ் இல்லையா... போய் எடுத்துவிட்டு வாங்க என அலைகழிப்பும் ஒருபக்கம்...இப்போது விரலில் மையும் வைக்கப் போகிறார்களாம்...
இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பணத்தை மாற்றுபவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டை விவரங்களை ஒரிஜனல் அட்டையை வைத்து வங்கி காசாளர் சரிபார்த்தாலே போதும்; அடையாள அட்டை ஜெராக்ஸ் எதுவும் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது.