பட்டியல் அனுப்புவதில் தாமதம்... பதக்க வாய்ப்பு பறிபோன பரிதாபம்.. கேரள போலீசார் விரக்தி
பட்டியல் அனுப்புவதில் தாமதமானதால் பதக்க வாய்ப்பு பலருக்கு பறிபோயுள்ளது. இதனால் போலீசார் விரக்தியில் உள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் பட்டியல் அனுப்ப தாமதம் ஏற்பட்டதால் பலருக்கு பதக்க வாய்ப்பு பறிபோனதால் விரக்தியில் உள்ளனர்.
குடியரசு தினத்தை ஒட்டி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக அந்தந்த மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரின் பட்டியலை உள்துறை அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த பட்டியல் அக்டோபர் மாதத்திற்குள் உள்துறைக்கு அனுப்பப்பட வேண்டும். வழக்கம் போல் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியது. ஆனால் கேரளாவில் இருந்து மட்டும் பட்டியல் அனுப்பப்படவில்லை. இதனால் உள்துறை அமைச்சகம் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 30ம் தேதி கேரள அரசு 23 பேர் அடங்கிய பட்டியலை ஆன் லைன் மூலம் அனுப்பியது. ஆனால் தாமதமாக பட்டியல் அனுப்பப்பட்டது என்று கூறி உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.
இதனால், இந்தக் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் பதக்கம் கேரள போலீசார் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகளிடையே பனிப்போர் அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள அரசின் இந்த மெத்தனப் போக்கிற்கு கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.