அதிமுக அலுவலகத்துக்கு வராதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை... தினகரன் பொளேர்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு துணை பொதுச்செயலாளரான தன்னை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : அதிமுக அணிகள் இணைப்பு குறித்து தமிழக அரசியல் அனல் பறக்கும் நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தினகரன் இன்று சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின்னர் சசிகலாவை சந்தித்து விட்டு வந்த தினகரன் சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கண்டிப்பாகச் செல்வேன். கட்சி கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நிச்சயம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்வேன். கட்சி அலுவலகம் செல்லும் போது கட்டாயம் ஊடகங்களுக்குச் சொல்வேன்.
சசிகலா என்னுடைய சித்தி, தாய் ஸ்தானத்தில் இருந்து என்னை வளர்த்தவர், அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள், நான் தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்னை கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.