வீட்டுக்காரர் உலகம் பூராவும் சுற்றுகிறார்.. மனைவிக்கோ பாஸ்போர்ட் மறுப்பு.. மோடி மனைவியின் பரிதாபம்!
அகமதாபாத்: திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். இவர் குஜராத்தின் வட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தனது சகோதரர் அசோக் மோடி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், குடும்ப நண்பர்களை சந்திக்க செல்வதற்காக யசோதா பென் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பம் மறுப்பு:
ஆனால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டது. இதற்குக் கூறப்பட்ட காரணம்தான் கொடுமையானது.
திருமணச் சான்றிதழ் இல்லை:
இது பற்றி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறுகையில், "நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்கவில்லை. ஏனெனில் அவர் திருமண சான்றிதழையோ, வாழ்க்கைத்துணைவருடனான கூட்டு பிரமாண பத்திரத்தையோ இணைத்து விண்ணப்பிக்கவில்லை.
ஆவணங்கள் அவசியம்:
திருமணமான பெண்களை பொறுத்தமட்டில், பாஸ்போர்ட் பெறுவதற்கு இவ்விரு ஆவணங்களில் ஒன்று அவசியம்" என்று கூறினார் பாஸ்போர்ட் அதிகாரி கான்.
சட்டப்பூர்வ வாய்ப்புகள்:
பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்து யசோதா பென்னின் சகோதரர் அசோக் மோடி கருத்து தெரிவிக்கையில், "பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகள் குறித்து எனது சகோதரி பரிசீலிப்பார்" என கூறினார்.
மோடி பிரதமராவதற்கு முன்பு வரை அவரது மனைவிதான் யசோதா பென் என்பது வெளி உலகத்திற்குத் தெரிவிக்கப்படாமல் இருந்தது என்பது நினைவிருக்கலாம்.