ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: ரயில்வே அமைச்சர்
பெங்களூர்: தற்போதைக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நேற்று, பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார் மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை", என்றார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-

ரயில் கட்டணம் உயராது...
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. டீசல் விலையை பொறுத்து ரயில் கட்டணம் 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். ஆனால் அதையும் தற்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை.

உற்பத்தி மையம்....
யாதகிரியில் ரூ.750 கோடி செலவில் ரயில்வே பெட்டிகளுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் உற்பத்தி மையம் தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்கள் பெரம்பூர்(தமிழ்நாடு), கபூர்தலா(பஞ்சாப்), ரேபரேலி(உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் செயல்படும் ரயில் பெட்டி தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.

பிப்ரவரியில் தொடக்கம்...
இதற்காக துணை பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3வது பெரிய ரயில் நிலையம்...
பெங்களூரில் பின்னி மில் அமைந்துள்ள இடத்தில் 3½ ஏக்கர் நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியுள்ளது. ரயில்வே திட்டங்களை விரிவுபடுத்த இந்த நிலம் பயன்படும். பெங்களூர் எலகங்கா ரயில் நிலையம் பெங்களூரின் 3-வது பெரிய ரயில் நிலையமாக மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 முதல் 20 நாட்களில் இந்த மேம்பாட்டு பணிகள் தொடங்கும். அங்கு கூடுதலாக 4-வது, 5-வது நடைமேடைகள் அமைக்கப்படும்.

வைஷ்ணதேவி கோவில்....
பாதை அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் வைஷ்ணதேவி கோவிலுக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் அனுமதி கிடைத்து உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன' என இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications