6வது முறையாக ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி- சோகத்தில் சு.சுவாமி!!
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாரம் பாபுவுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடியிருந்தார்.
சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
Waiting for the Asaram bail rejection order. If it is because the sixth material has not been examined then the door is open to re- apply.
— Subramanian Swamy (@Swamy39) June 20, 2015
அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆசாராம் பாபுவை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகளில் பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சாமி களமிறங்கினார்.
இருப்பினும் 4 முறை ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் சுவாமி ஆஜராகினார்.
ஆனால் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி கவலை தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக கீழ் நீதிமன்றத்தில் இரு முறையும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இரு முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையும் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.