பதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ
Recommended Video
திருவனந்தபுரம்: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தப் பதட்டமும் இல்லாமல் ஜாலியாக சிரித்தபடி காணப்பட்டார்
ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ. அங்கு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்ச்சையில் சிக்கினார். 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்தப் பெண்ணை பிராங்கோ பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பதிவாகியுள்ளது.
அவரை தற்போது போப்பாண்டவர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த நிலையில் கேரள காவல்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். கொச்சியில் வைத்து விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அவர் கோட்டயம் மாவட்டம் பாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் ஜாலியாக, கேஷுவலாக சிரித்தபடி காணப்பட்டார் பிஷப் பிராங்கோ. கோர்ட்டில் இன்று நடந்த விசாரணை முடியும் வரை புன்னகையுடன்தான் இருந்தார். கோர்ட்டுக்கு வெளியே அவர் அழைத்து வரப்பட்டபோது அங்கு கூடியிருந்த பெரும் திரளான மக்கள் சத்தம் போட்டு திட்டினர். ஆனால் அதற்கும் பிராங்கோவின் ரியாக்ஷன் புன்னகைதான்!
முன்னதாக நேற்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக பிராங்கோ கூறியதால் அவரை கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.