ஜான்சியில்தான் போட்டி...சோனியாவுக்கு எதிராக போட்டியிடச் சொன்னாலும் ஓகே.: உமாபாரதி
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி அறிவித்துள்ளார். இருப்பினும் கட்சி மேலிடம் கட்டளையிட்டால் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென யோகா குரு பாபா ராம்தேவ், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக உமாபாரதியை களமிறக்கலாம் என்று கூறினார்.

அத்துடன் உமாபாரதியை தொடர்பு கொண்டும் இது குறித்து ராம்தேவ் பேசினார். இதனால் ரேபரேலி தொகுதியில் உமாபாரதி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தாம் ஜான்சி தொகுதியில் மட்டுமே போட்டியிட விரும்புகிறேன். என்னை ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என்கிற பாபா ராம்தேவின் கருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஆனால் ஜான்சி தொகுதியை விட்டு விலக முடியாது என்று கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் தாம் தெரிவித்துவிட்டதாக உமாபாரதி கூறியுள்ளார்.
அத்துடன் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டால் 2வது தொகுதியாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட தயார் என்றும் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியும், சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications